நவம்பர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: நவம்பர் 2016

உங்களுடைய மதிப்பு என்ன?

கி.மு. 75ல் ஜூலியஸ் சீஸர் என்ற இளம் ரோம பிரபுவை கடற்கொள்ளையர்கள் பணத்திற்காகக் கடத்திச் சென்றதாக ஒரு கதை சொல்வார்கள். அவனை விடுவிக்க பணமாக 20 தாலந்து வெள்ளியைக் கேட்டனர். (இன்றைய மதிப்பு 6,00,000 அமெரிக்கா டாலர்களாகும்). இந்த தொகையை கேட்டபொழுது சீஸர் நகைத்து மீட்பு பணத்தை 50 தாலந்துகளாக உயர்த்தும்படிக் கூறினான். ஏனெனில் அவன் 20 தாலந்துகளுக்கு மேலாக விலையேறப்பட்டவன் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அவர்களோ அவன் யார் என்பதை அறிந்திருக்கவில்லை.

சீஸர் கர்வத்துடன் தன் மதிப்பை பணத்தினால் நிர்ணயித்து கொண்டதற்கும், தேவன் நம் ஒவ்வொருவர் மேலும் வைத்துள்ள மதிப்பிற்கும் எத்தனை பெரிய வித்தியாசம்! நம்முடைய மதிப்பை பணத்தினால் அளந்து விட முடியாது. நமது பரம பிதா நமக்காக என்ன செய்தார் என்பதே நமது மதிப்பை காட்டுகின்றது.

என்ன விலைக் கிரயம் செலுத்தி நம்மை இரட்சித்தார்? தம்முடைய ஒரே பேறான குமாரனை சிலுவையில் ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார். பாவங்களில் இருந்து மீட்க பிதாவாகிய தேவன் விலைக்கிரயம் செலுத்தினார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” (1 பேது. 1:18-19).

தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால் தம்முடைய ஒரே குமாரனை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்துக் குமாரனின் இரத்தத்தையே நமக்கு விலைக் கிரயமாக செலுத்தி நம்மை மீட்டுக் கொண்டு, மரணத்தை மேற்கொண்டு உயிர்த்தெழுந்தார். அந்த அளவிற்கு நீங்கள் அவரில் விலையேறப் பெற்றவர்கள்.

நான் ஐசுவரியவான்!

நீங்கள் இந்தக் காட்சியை டிவி விளம்பரத்தில் பார்த்திருக்கலாம். கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒருவர் கதவை திறப்பார். வெளியில் இருந்து ஓர் மனிதர் உள்ளே வந்து, மிகப் பெரிய தொகை எழுதப்பட்டிருக்கும் ஓர் காசோலையை கொடுப்பார். அதைப் பெற்றுக்கொண்ட மனிதர் ஆடிப்பாடி, குதித்து, மகிழ்ந்து காண்பவர் எல்லோரையும் கட்டி அணைப்பார். “நான் வெற்றி பெற்றுவிட்டேன்! நான் பணக்காரனாகிவிட்டேன்! என்னால் இதை நம்பமுடியவில்லை. என் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிட்டது!” என்று குதூகலிப்பார். திடீரென செல்வம் நம்மை தேடி வந்தால் நாம் இப்படித் தான் கட்டுக்கடங்கா உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம்.

வேதாகமத்தில் மிகவும் நீளமான அதிகாரமாகிய சங்கீதம் 119ல் ஓர் அற்புதமான வசனத்தை காணலாம். “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்” (வச. 14). என்ன அருமையான ஒரு ஒப்பிடுதல்! பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது, நாம் குதூகலிப்பது போல் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நாம் வாழும் பொழுதும் ஆனந்தக் களிப்படைய முடியும்! 16ஆம் வசனத்திலும் இதையே திருப்பி சொல்கிறார். கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்காய் நன்றியுள்ள இருதயத்துடன் தன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார் சங்கீதக்காரன். “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்”.

ஆனால், பொக்கிஷத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சந்தோஷத்தைப் போல, தேவனுடைய கட்டளைகளை பெற்றுக்கொள்ளும்பொழுதும் அதே உணர்வுடன் நாம் இல்லாவிட்டால்? தேவனுடைய கட்டளைகள் பொக்கிஷத்தைப் போல எப்படி சந்தோஷப்படுத்தும்? அது யாவும் நன்றியுள்ள இருதயத்தில் தான் தொடங்கும். அப்படிப்பட்ட குணாதிசயத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதன்மேல் தான் நாம் கவனம் செலுத்துவோம். எப்பொழுது தேவனுடைய ஈவுகளுக்காய் நன்றி செலுத்த ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுதே நம் ஆத்துமாக்கள் பெலனடைய ஆரம்பித்து விடும். அவரது ஜீவ வார்த்தையாகிய களஞ்சியத்தலிருந்து ஞானம், அறிவு மற்றும் சமாதானத்தை காண வேண்டிக்கொள்வோம்.

ஒவ்வொரு நாளும், நாம் இயேசுவை அதிகமாக நேசிக்கும் பொழுது, நிச்சயமாக நாம் ஐஸ்வரியவான்கள் தான்.

அழகானது

இரண்டு வாலிபப் பெண்களை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். முதல் பெண் நல்ல பெலத்தோடும், ஆரோக்கியத்தோடும் இருக்கிறாள். மற்றொரு பெண்ணோ சக்கர நாற்காலியில் அமர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து செயல் பட முடியாத நிலையில் கட்டுண்டிருக்கிறாள். அந்த சக்கர நாற்காலியில் இருப்பதால் பல மனப் போராட்டங்களையும் உடலில் வலிகளையும், வேதனைகளையும் அடைகிறாள்.

ஆனால் அந்த அழகான இரு பெண்களும் சேர்ந்து இருக்கும் பொழுது ஆனந்தமாக சிரித்து மகிழ்ந்து ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்து அவர்களுக்குள் அமைந்த விலையேறப்பெற்ற நட்பை பார்த்தனர்.

இயேசுவும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை போன்ற மனிதர்கள் மேல் அதிக கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டார். வாழ்நாள் முழுவதும் உடற் சுகவீனத்தால் கஷ்டப்படுவர் மீதும், உடல் குறைபாடுகள் உள்ளவர் மீதும், சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இயேசு அதிக கவனம் செலுத்தினார். மதத் தலைவர்களால் அலட்சியம் செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மீது எண்ணெய் பூசிய பொழுது அதை அங்கீகரித்து வரவேற்றார் (லூக்:7:39). மற்றொரு சமயத்தில், வேறொரு பெண் அதைப் போலவே செய்த பொழுது அவளது செயலை பலரும் இகழ்ந்து பேசி விமர்சித்தனர். அப்பொழுது இயேசு, “அவளை விட்டுவிடுங்கள்.......... என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (மாற். 14:6) என்றார்.

தேவன் எல்லோரையும் சமமாக மதிப்பிடுகிறார். அவரது கண்களில் ஏற்றதாழ்வுகள் இல்லை. உண்மையில் நமக்கெல்லாம் கிறிஸ்துவின் அன்பும், மன்னிப்பும் தேவை. நம் மீது இருக்கும் எல்லையற்ற அன்பினால் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

எல்லோரையும் தேவசாயலில் படைக்கப்பட்டவராகவும், அவரது அன்பிற்கு பாத்திரவான்களாகவும் இயேசு பார்ப்பது போல நாம் அனைவரையும் பார்க்கக் கடவோம். ஆகவே நாம் கிறிஸ்துவைப் போல் எல்லோரையும் சமமாக பாவித்து அவரைப் போலவே பிறரது அழகைக் காண அறிந்து கொள்ள வேண்டும்.

சிவப்பு தூண்டில்

சில வருடங்களுக்கு முன்பதாக ஏதேச்சையாக இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளரான ஏலியனின் (Aelian) மீன் பிடிக்கும் கதையை வாசிக்க நேர்ந்தது. அது ஓர் மீனவ நாட்டுப்புற கதையாகும். “பொரோக்காவிற்கும் தெசலோனிக்காவிற்கும் இடையே ஓர் ஆறு உள்ளது. அதன் பெயர் ஆஸ்ட்ரகஸ். அதில் நிறைய புள்ளிகளுள்ள ட்ரவுட் (Trout) மீன்கள் உள்ளன”. மேலும் அவற்றை எப்படி அந்த மக்கள் பிடிப்பார் என்பதை விவரித்திருந்தார். “ஒவ்வொரு மீனுக்கும் ஒரு பொறியைத் தயாரித்து, கருஞ்சிவப்பு நிற கம்பளி நூலை ஓர் கொக்கியில் மாட்டி, அதில் இரண்டு பறவையின் இறகுகளையும் சேர்த்து, பின் அந்த பொறியை தண்ணீரில் தூக்கி வீசுவர். சிவப்பு வண்ணத்தினால் கவரப்பட்ட மீன் அருகில் வந்து, தீனியை தின்பதற்கு அதைக் கவ்வும்” (On the Nature of Animals).

இதே தந்திரத்தை தான் மீனவர் இன்றும் பயன்படுத்துகின்றனர். இதற்கு பேர் தான் ரெட் ஆக்கிள் (சிவப்பு தூண்டில்). முதன் முதலில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பயன்படுத்தினர். இன்றும் கூட நேர்த்தியாய் மீன்களைப் பிடிக்க இந்த தூண்டில்கள் உதவுகின்றன.

இந்தப் பழங்கதையை படித்தவுடன் ஓர் எண்ணம் தோன்றியது. பழைய காரியங்கள் எல்லாம் காலம் கடந்து விட்ட, ஒன்றுக்கும் உதவாத, கட்டுக்கதைகள் அல்ல – முக்கியமாக மனிதர்கள். முதுமையில் மன நிறைவுடனும், சந்தோஷத்துடனும் வலம் வந்து, நாம் தேவனை ஆழமாக அறியும் அறிவையும், நிறைவையும் எடுத்துரைத்து வாழ்ந்து வந்தால், நமது முதுமையிலும் நாம் பலருக்கு மிகவும் பயனுள்ளவராய் இருப்போம். முதுமைக் காலத்தில் குறையும் ஆரோக்கியத்தையும் கடந்த காலத்தையும் பற்றி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அமைதியும், மகிழ்ச்சியும், தைரியமும் கனிவும் நிறைந்த அற்புத கால கட்டமாக இருக்கலாம்; தேவனோடு நடந்து, வாழ்ந்து, வளர்ந்தவர்கள் தங்கள் கனிகளை பிறர் சுவைக்க வெளிப்படுத்தும் அழகிய காலம் அது.

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்... அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
(சங். 92:13-15).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

திருப்தியை பற்றிக்கொள்ளுதல்

ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கட்டுரையில், பிரெண்டா என்ற வாசகருக்கு அவர் பதிலளிக்கையில், அவள் தனது இலட்சியத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள் அவளை அதிருப்தி அடையச் செய்ததாக புலம்பினாள். அதற்கான மருத்துவரின் பதில் அறிவுமழுங்கியதாக இருந்தது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் படைக்கப்படவில்லை, "உயிரோடிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கும் மட்டுமே" என்று அவர் கூறினார். திருப்தி எனும் கைக்கெட்டாத பட்டாம்பூச்சியைத் துரத்துவது நமது சாபம் என்றார். அதை எப்போதும் பிடிக்க முடியாது என்று அவர் மேலும் கூறினார்.

மனநல மருத்துவரின் வார்த்தைகளைப் படித்து பிரெண்டா எப்படி உணர்ந்திருப்பாள்? அதற்குப் பதிலாகச் சங்கீதம் 131ஐப் படித்தால் அவள் எவ்வளவு வித்தியாசமாக உணருவாள்? என்று யோசித்தேன். அதன் வார்த்தைகளில், திருப்தியை எவ்வாறு கண்டறிவது என்பதை நமக்கு தாவீது காட்டுகிறார். அவர் மனத்தாழ்மையோடு ஆரம்பிக்கிறார், தனது ராஜரீகமான நோக்கங்களை ஒதுக்கி வைக்கிறார். மேலும் எது முக்கியமெனும் வாழ்க்கையின் ஆழமான கேள்விகளோடு போராடிக்கொண்டிருந்த அவர், அவற்றையும் ஒதுக்கி வைக்கிறார் (வச. 1). பின்னர் அவர் தேவனுக்கு முன்பாக தனது இதயத்தை அமரப்பண்ணினார் (வச. 2), எதிர்காலத்தை அவரது கைகளில் ஒப்படைக்கிறார் (வச. 3). அதின் விளைவு அற்புதமானது: "ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல இருக்கிறது" என்று அவர் கூறுகிறார். அதாவது "நான் திருப்தியாக இருக்கிறேன்" (வச. 2).

இதுபோன்ற நமது நொறுங்கிய உலகில், திருப்தி என்பது சில நேரங்களில் எட்டாக் கனியாக இருக்கும். பிலிப்பியர் 4:11-13 இல், அப்போஸ்தலன் பவுல் மனநிறைவைக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்று கூறினார். ஆனால் நாம் "உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்" மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்று நம்பினால், மனநிறைவு நிச்சயமாகப் பிடிக்க எட்டாக் கனியாகவே இருக்கும். தாவீது நமக்கு மற்றொரு வழியைக் காட்டுகிறார்: தேவனின் சமுகத்தில் அமைதியாக இளைப்பாறுதலின் மூலம் மனநிறைவைப் பெறுவதே அவ்வழி.

சகோதரன் சவுல்

"ஆண்டவரே, தயவுசெய்து என்னை அங்குத் தவிர வேறு எங்கும் அனுப்புங்கள்." சுழற்சிமுறையில் பயிலிடம் மாற்றவேண்டியிருந்த மாணவனாக ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு முன், ஒரு இளைஞனாக அதுவே என் ஜெபம். எங்குச் செல்வேன் என்று நான் அறியேன், ஆனால் எங்குச் செல்ல விரும்பவில்லை என்று நான் அறிவேன். நான் அந்த நாட்டின் மொழியைப் பேசவில்லை, அதன் பழக்கவழக்கங்கள் மற்றும் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வுகளால் என் மனம் நிறைந்திருந்தது. எனவே என்னை வேறு இடத்திற்கு அனுப்பும்படி தேவனிடம் கேட்டேன்.

ஆனால் தேவன் தம் எல்லையற்ற ஞானத்தால் நான் செல்ல விரும்பாத இடத்திற்குத் துல்லியமாக என்னை அனுப்பினார். அவர் செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மண்ணில் எனக்கு அன்பான நண்பர்கள் இருக்கிறார்கள்.  என் திருமணத்திற்கு என் சிறந்த நண்பர் ஸ்டீபன் அங்கே வந்தார். அவருக்கும் திருமணமாகிவிட்டது.

தேவன் மனமாற்றத்தை ஏற்படுத்தினால் அற்புதமான விஷயங்கள் நடக்கும்! அதுபோன்ற ஒரு மாற்றம் இரண்டு வார்த்தைகளால் விளக்கப்படுகிறது: "சகோதரனாகிய சவுலே" (அப்போஸ்தலர் 9:17).

அந்த வார்த்தைகள் அனனியாவிடமிருந்து வந்தவை, சவுலின் மனமாற்றத்திற்குப் பிறகு உடனடியாக அவரது பார்வையைக் குணப்படுத்த அழைக்கப்பட்டவர் (வ. 10-12). சவுலின் கடந்த காலத்தின் வன்முறை காரணமாக அனனியா முதலில் எதிர்த்தார், “உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன்.” (வச. 13) என்று ஜெபித்தார்.

ஆனால் அனனியா கீழ்ப்படிந்து சென்றார். அவர் மனம் மாறியதால், அனனியா விசுவாசத்தில் ஒரு புதிய சகோதரனைப் பெற்றார், சவுல் பவுலானார், மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தி வல்லமையுடன் பரவியது. உண்மையான மாற்றம் அவரால் எப்போதும் சாத்தியம்!

பாவங்களை களையெடுத்தல்

எங்கள் தாழ்வாரத்தில் தோட்டக் குழாய்க்கு அடுத்ததாக ஒரு தளிர் துளிர்ப்பதை நான் கவனித்தபோது, அதனால் என்னவாகப்போகிறது என்று புறக்கணித்தேன். ஒரு சிறிய களை எப்படி நமது புல்வெளியைக் காயப்படுத்தும்? ஆனால் வாரங்கள் செல்ல செல்ல, அந்த களை ஒரு சிறிய புதரின் அளவு வளர்ந்து எங்கள் முற்றத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதன் தேவையற்ற தண்டுகள் எங்கள் நடைபாதையின் ஒரு பகுதியில் வளைந்து மற்ற பகுதிகளில் முளைத்தன. அதன் அபாயகரமான வளர்ச்சியைப் புரிந்துகொண்ட நான், என் கணவரின் துணையோடு காட்டுக் களைகளை வேருடன் தோண்டி, களைக்கொல்லியைக் கொண்டு எங்கள் முற்றத்தைப் பாதுகாத்தேன்.

அதேபோலவே பாவத்தின் இருப்பை நாம் புறக்கணிக்கும்போது அல்லது மறுக்கும்போது, அதின் அபாயகரமான வளர்ச்சியால் நமது வாழ்வில் படர்ந்து, நமது அந்தரங்கத்தை இருளாக்கிவிடும். பாவமில்லாத நமது தேவனிடம் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாம், பாவங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம், அதனால் நாம் "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே" (1 யோவான் 1:7) நடக்கலாம். மனந்திரும்புதலின் மூலம், நாம் மன்னிப்பு மற்றும் பாவத்திலிருந்து விடுதலையை அனுபவிக்கிறோம் (வ. 8-10). நமக்காக இயேசுவென்னும் மிகச்சிறப்பாகப் பரிந்துபேசுகிறவர் உண்டு (2:1). அவர் நம் பாவங்களுக்கான இறுதி விலையை மனமுவந்து செலுத்தினார். ”நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற" (வச. 2) அவருடைய ஜீவரத்தமே அந்த கிரயம்.

நம்முடைய பாவம் தேவனால் சுட்டிக்காட்டப்படும்போது, ​​நாம் மறுப்பு, தவிர்ப்பு அல்லது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நாம் ஒப்புக்கொண்டு மனந்திரும்பும்போது, நாம் அவரோடும் பிறரோடும் கொண்டிருக்கும் உறவிற்குத் தீங்கு விளைவிக்கும் பாவங்களை அவர் களையெடுக்கிறார்.